பிரான்ஸ் அரசு குடும்ப வன்முறை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு இரண்டு நாட்கள் முன் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.
பிரான்ஸில் குடும்ப வன்முறையைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் 130 பெண்களுக்கு மேல் தங்கள் கணவராலோ முன்னாள் கணவராலோ கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அதிக அளவில் குடும்ப வன்முறைக்கு எதிரான குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சனிக்கிழமை பாரிஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இனிமேலும் இன்னொரு கொலை நடக்கக் கூடாது என முழக்கமிட்டபடி சென்றனர்.
குடும்ப வன்முறையை எதிர்க்கும் வாசகங்களைக் கொண்ட ஊதா நிற பதாகைகளைத் தாங்கி பேரணியாகச் சென்றனர். ஊதா நிறம் பெண்ணுரிமை இயக்கத்துக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
“வேலை செய்யும் இடத்திலும் நெருக்கமான உறவு கொண்டுள்ள இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக நடக்கிறது.” என போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கவலை தெரிவிக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் GREVIO என்ற குடும்ப வன்முறைக்கு எதிரான அமைப்பு, பிரான்ஸ் அரசு குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறையைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது
இந்தப் பேரணியை NousToutes என்ற அமைப்பு முன்னெடுத்துள்ளது. அந்நாட்டு அரசு குடும்ப வன்முறை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு இரண்டு நாட்கள் முன் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.
“பெண்கள் அநியாயமான முறையில் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதைப் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தனது கடமையைச் செய்ய வேண்டும்.” என்று பேரணியை ஏற்பாடு செய்த அமைப்பைச் சேர்ந்த கரின் பிளாசாட் கூறுகிறார்.